தமிழ் திரையிசையின் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் இளமை பருவம், கல்வி, திரையுலக வாழ்க்கை, சாதனை குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
மொழியின் ஆதிக்கங்களை, என்றோ இசை வென்று காட்டி வெற்றி வாகை சூடிவிட்டது. இனம், மதம், கலாச்சாரம் என்ற எல்லைகளுக்குள் தன்னை அடக்கிக் கொள்ளாத இசை, ஒரு சில இசை குயில்களிடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு தஞ்சமடைந்துவிட்டது.
அந்த இசைக்குயில்களில் ஒரு குயில் வசந்தங்களை வாரி இறைத்து மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகிறது… அந்த இசை தேவதை யார்?… இசை ரசிகர்களை தன் குரலால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் எஸ். ஜானகிதான் அவர்…
ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பள்ளப்பட்லாவில் ராமமூர்த்தி – சத்தியவதி தம்பதியினருக்கு மகளாக பிறந்த ஜானகி எனும் இசைக்குயில், மழலையாய் இருக்கும்போதே பாடத் தொடங்கிவிட்டது. தனது மாமாவின் அறிவுரைக்கிணங்க, 20 வயதில் சென்னைக்கு வந்த இவர், ஏ.வி.எம். ஸ்டுடியோவில் மாதச் சம்பளத்திற்கு பாடகியாக சேர்ந்தார். 1957ம் ஆண்டில் வெளியான “விதியின் விளையாட்டு” திரைப்படத்தில் எஸ். ஜானகி எனும் வற்றாத இசை நதி, தனது இசை ஜால விளையாட்டை தொடங்கியது. ”பெண் என் ஆசை பாழனாது ஏனோ?” என்பதுதான் முதல் பாடல். வாய்ப்பளித்தவர் இசையமைப்பாளர் சலபதிராவ்…
பின்னர், தெலுங்குப் படங்களில் கண்டசாலாவுடன் பாடும் வாய்ப்பு வெற்றிபெற தொடர்ந்து வற்றாத இசைப்பயணத்தை தொடர்ந்தார். தமிழில் ஜானகி பாடி வெளிவந்த முதல் பாடல் ”கண்ணுக்குநேரே, மின்னிடும் தாரை” என்பதாகும். 1957-ம் ஆண்டு வெளியான மகதல நாட்டு மேரி படத்தில்தான் இந்தப் பாடல்… பி.பி.சீனிவாசனுடன் இணைந்து பாடியிருந்தார்…
விதியின் விளையாட்டின் தொடங்கி இன்று வரை ஜானகியின் குரல், ஜல், ஜல், ஜல் எனும் சலங்கை ஒலிபோல இன்னும் காற்றில் கலந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
தென்னிந்திய இசை ரசிகர்களின் தேவதையாக வலம் வரும் ஜானகியின் இசைப் பயணம் நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது.
பாதை தெரியுதுபார் படத்தில் தென்னங்கீற்று ஊஞ்சலிலே, அன்பாலே தேடிய, காலையும் நீயே, மாலையும் நீயே போன்ற பாடல்களில் வழிந்தோடும் ஜானகியின் ஹம்மிங் வெறும் முனுமுனுப்பல்ல… இசையின் மென்மையான முழக்கம்.
பி.சுசிலா என்ற பாட்டுப்பறவை சிறகடித்து வானில் சிம்மாசனத்தோடு பறந்து திரிந்துகொண்டிருந்த போது, அந்த வானத்தில் தன்னுடைய சிறகுகளையும் சிலுப்பி உயரத்தைத் தொட முயற்சித்துக் கொண்டிருந்தவர் ஜானகி…
கே.பி.சுந்தராம்பாள், எம்.எல். வசந்தகுமாரி என பாட்டுத்தலைவிகள் பல்லக்கில் பவனி வந்துகொண்டிருந்தபோது ஒரு பாமரனைப்போல திரை இசைத்துறையில் நுழைந்த ஜானகி தாக்குபிடிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன… வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு வாழ்கிறவர்கள் பதில் சொல்வதைவிட, வரும் காலங்கள் சொல்லும் பதில் தான் மிகப் பொருத்தமாக இருக்கிறது… ஜானகியின் வருங்காலம் வசந்தகாலமாகவே இருந்தது…
60-களில் தொடக்கத்தில் ஆளுமை செய்துகொண்டிருந்த பல பின்னணி பாடகிகள் ஜானகியின் குரலில் இசையமைப்பாளர்கள் ஈர்க்கப்பட்டாலும், வாய்ப்புகள் என்னவோ பெரிய அளவில் வரவில்லை… சாத்தப்பட்டிருக்கும் கதவுகள் மட்டுமே தட்டப்படுகின்றன… ஆனால், திறந்திருக்கும் கதவுகளை யாரும் திரும்பிபார்ப்பதேயில்லை…
1962-ஆம் ஆண்டு கொஞ்சும் சலங்கை திரைப்படம் வெளியானது… இந்த கொஞ்சும் சலங்கையில் ஜானகியின் கொஞ்சும் குரலில் இடம் பெற்ற “சிங்கார வேலனே தேவா” தேன் அமுதில் துவைத்த பலா… தொழில்நுட்பம் பெரிதும் வளராத அந்தக் காலத்தில் 2 இடங்களில் இந்தப் பாடல் பதிவானது… தயாரிப்பாளர் ராமன் ஸ்டூடியோவில் ஜானகி பாட, பாடலோடு இணையாக ஒலிக்கும் நாதஸ்வரத்தை, நாதசுரமேதை காருக்குறிச்சி அருணாச்சலம் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் வாசித்து இரண்டு டிராக்கில் பதிவு செய்ய பின்னர் “மிக்ஸிங்” செய்யப்பட்ட இந்தப் பாடல்… ஜானகியின் புகழை ஜகம் அறியத் தொடங்கியது…
திரைஇசை வரலாற்றின் இனிப்பான பெயர் “எம்.எஸ்.வி.”… மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற நீண்ட இசையின், மென்மைக்கூட்டிய சுருக்கமான மெல்லிசைதான் எம்.எஸ்.வி…
இவரது இசையில் ஜானகி பாடிய பலபாடல்கள், இனிக்கும் பலா பாடல்கள்…
70-களில் மத்தியில் திரைஇசையில் எழுந்து நின்றது ஒரு அலை… இந்த அலையில் தமிழர்கள் முதலில் பாதம் பதித்தார்கள்… பிறகு உடல் நனைத்தார்கள்… கடைசியில் உள்ளம் உருகினார்கள்… திரைஇசையின் பெரிய ராஜாவாக திகழும் இளையராஜா தான் அவர்… ஜானகியின் சுரம், லயம், பாவம், அனைத்தையும் ஜானகியைவிட அதிகமாக அறிந்து வைத்திருப்பவர்…
இளையராஜா எதிர்பார்த்ததைவிட எப்போதுமே ஒரு மடங்கு அதிகமாக தனது குரலில் பங்களிப்பு செய்பவர் தான் ஜானகி… இருமேதைகள் இணைந்தால்…
நெஞ்சத்தை கிள்ளாதே என்ற படத்தில் சிறுவனுக்கும், இளைஞனுக்கும் இடைபட்ட ஆண் குரலில் அசத்தி இருப்பார் ஜானகி…
என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது..
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே..
இந்த மன்றத்தில் ஓடிவரும்..
கூந்தலிலே நெய் தடவி..
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..
காதலின் பொன்வீதியில்..
பொன்னென்பேன் சிறு பூவென்பேன்..
அன்னக்கிளி உன்னைத் தேடுதே..
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்..
சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தால் துடிக்கிறேன்..
போன்ற பாடல்கள் ஜானகியின் குரல் அமுதுக்கு சான்று தரும் இசை முத்துக்கள்…
4 முறை தேசிய விருது, 12 முறை கேரள அரசின் விருது, 6 முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணி பாடகி விருது…
6 முறை ஆந்திர அரசின் விருது, ஓரிசா அரசின் விருது என ஜானகியால் விருதுகள், விருதுகள் பெற்றன… எனினும் ரசிகர்கள் தான் எனக்கு பெரிய விருது என்றார் ஜானகி… ஐம்பதுகளில் தொடங்கிய ஜானகியின் இசைப்பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது… வாசம் வீசும் மலர்களைப்போல ரசிக நெஞ்சங்களில் படர்ந்து கொண்டே இருக்கிறது.
கட்டுரை : சென்னையில் இருந்து மூத்த பத்திரிக்கையாளர்
லாரன்ஸ் விஜயன்.