ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறிய விவகாரம். அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
தாமிரபரணி ஆறு பொதிகைமலையில் தோன்றி புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. இந்த தாமிரபரணி ஆறு வற்றாத ஜுவநதி. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 40 லிட்டர் தண்ணீர் வீதம் தினம்தோறும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் கொடுத்து வரும் ஆறு. அதுமட்டுமின்றி நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் ஏக்கரும் விவசாய நிலங்கள் இந்த தாமிரபரணி நதி மூலம் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இன்று தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் ஆற்று தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இங்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வழங்கப்படும் சாத்தான்குளம் பகுதி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிகளிலும் குடிநீர் பச்சை நிறத்தில் தண்ணீர் வருவதால் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதால் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த தண்ணீரில் ஏதும் ரசாயனங்கள் கலந்துள்ளதா? அல்லது சாக்கடை அதிக அளவு கலப்பதாக இதுபோல் நிறம் மாறியுள்ளதா? என்ற விபரத்தை உடனே பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் தேங்கியுள்ள பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியை தொடங்கியுள்ளனர். இதற்காக அணைக்கட்டில் உள்ள மதகுகளை திறந்து ஆற்றில் தண்ணீர் விடப்பட்டுள்ளது.
அணைக்கட்டில் இருந்து முழுமையாக தண்ணீர் வெளியேற்றிய பின்னர் வரும் தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து செய்தியாளர் க.முத்துவேல்