கட்டுரை – மரு. வீ.புகழேந்தி, சென்னை.
சென்னை+அதன் சுற்றுப்புற பகுதிகளை வெள்ளத்திலிருந்து காக்கவும்,சென்னையின் நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும்,தமிழக நீர்வளத்துறை அடையாறு,கோவளம் ஆற்றுப்படுகைகளில் உள்ள 200 குளங்களை ஒன்றிணைக்கும் திட்டத்தை கையில் எடுக்க உள்ளது.
குறிப்பாக,பருவமழைக் காலங்களில்,தாம்பரம்,முடிச்சூர்,மன்னிவாக்கம் பகுதிகளில் வெள்ள பாதிப்பை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையின் துயரம் என்னவேனில்,அங்கு பெய்யும் 90% மழைநீரை முறையாக தேக்கி வைக்க வசதிகள் இல்லாததால்,அவை வீணாக கடலில் கலக்கிறது என்பதால்,அதை சீர்செய்ய 200 குளங்களை இணைக்கும் திட்டம் கையில் எடுக்கப்பட உள்ளது.
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் குளங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு நீர்மேலாண்மை சிறந்து விளங்கிய வரலாற்றை தமிழக நீர்வளத்துறை மறந்தது ஏன்?
அடையார் வடிநிலப்பகுதியில் மொத்தம் உள்ள 196 குளங்களில்,134 குளங்களும்,கோவளம் வடிநிலப்பகுதி(River Basin)யில் மொத்தமுள்ள 120 குளங்களில்,66 குளங்களும் இணைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் மூலம்,சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 200 குளங்கள் “Cut and Cover” முறை மூலம் இணைக்கப்பட உள்ளன.இந்த முறையில் ஒரு குளத்திலிருந்து இன்னொரு குளத்திற்கு,தரைக்கடியில் அதிகப்படியான நீரை கொண்டு செல்லும் வசதிகள் உள்ளதால்,திறந்த வெளியில் நீரை கொண்டு செல்ல தேவையில்லாது போகிறது.
மேலும் நில ஆக்கிரமிப்பு குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
நீர்நிலை ஆக்கிரமிப்பும் இம்முறையில் தவிர்க்கப்படுகிறது.
இம்முறை செலவு குறைவு என்பதுடன்,அதிக நேரம் இதை நடைமுறைப்படுத்த தேவையில்லை.
தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன், Japan International Cooperation Agency உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
சென்னையின் வருடாந்திர நீரின் தேவை(வீட்டு+தொழிற்நிறுவனங்கள் சேர்ந்து) 22 tmcft என தற்போது உள்ளது, 2030ல்,28 tmcft ஆக அதிகரிக்கும்(வளரும் மக்கள்தொகை,தொழிற்நிறுவனங்களின் வளர்ச்சி…)என கணிக்கப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் சென்னையின் நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தவும்,இருக்கும் நீர்நிலைகளைக் காக்கவும் தேவை நிச்சயம் உள்ளது.
நீர்வளத்துறை சென்னையின் நீர் கொள்ளளவை 4 tmcft அதிகப்படுத்த(தற்போதுள்ள 13.22 tmcft நீர் கொள்ளளவை 17.22 tmcft ஆக அதிகப்படுத்த)200 குளங்களை இணைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது.
வரலாற்று ஆவணங்களில் படி,தமிழகத்தின் சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் 3,600 குளங்கள் இருந்தற்கான ஆதாரங்கள் இருந்தாலும்,நீர்வளத்துறை மேற்சொன்ன மாவட்டங்களில் தற்போது 1,000த்திற்கும் கீழான குளங்களை மட்டுமே பராமரித்து வருகிறது. மீதியுள்ள 2,600 குளங்கள் என்னாயின?!
பரந்தூர் விமானநிலைய பரப்பில் 27% ஈரநிலங்கள் இருக்க,அவை அழிக்கப்பட்டால் சென்னையின் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் எனத் தெரிந்தும் தமிழக அரசு விமானநிலையம் அமைக்க முற்படுவது சென்னையை வெள்ளத்திலிருந்து காக்கும் நோக்கத்திற்கு முரண்பாடாக இல்லையா?
தமிழக அரசு செவிசாய்க்குமா?
சென்னையின் அக்கரை-ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் மணற்குன்றுகள் இருந்தும்,அது ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் பகுதியாக இருந்தும் பறவைகள் அங்கு வந்து முட்டையிடும் ஆதாரங்கள் இருந்தும்,அந்த கடற்கரையை சட்டரீதியாக அனுமதி பெறாமல்,மணற்குன்றுகளை சமன்படுத்தியும்(இது CRZ விதிகளின் படி சட்டவிரோதம்),சாலைகள் அமைத்தும்,(வெளிச்சம் இருந்தால் ஆமைகள் வந்து முட்டையிடாது.),தாவரப் புதர்களை அகற்றியும்(இதனால் பறவைகள் அங்கு வந்து முட்டையிடாது!)சட்டவிரோத நடவடிக்கைகளை கடற்கரையை வணிக நோக்கில் மேம்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் திட்டமிட்டுள்ளதை,அதன் மூத்த அதிகாரி,”அங்கு மணற்குன்றுகள் இல்லை”என விளக்கமளித்து நியாயப்படுத்த முற்படுவது வியப்பாக உள்ளது.
செயற்கைக் கோள் படங்கள் மூலம் அங்கு மணற்குன்றுகள்(Sand Dunes)இருந்ததை உறுதிபடுத்த முடியும்.!